உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த 19 வயது மாணவர் தீபக் குப்தா, கால்நடை கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி திங்கள் கிழமை அதிகாலை 12.30 மணியளவில், மூன்று தனித்தனி வாகனங்களில் வந்த ஒரு கடத்தல் கும்பல், ஒரு கிராமத்திலிருந்து கால்நடைகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொண்ட கிராம மக்கள், உடனடியாக சத்தம்எழுப்பினர்.

அப்போது தீபக், கடத்தல்காரர்களைப் பின் தொடரச் சென்றதாக தெரிகிறது. குற்றவாளிகள், தீபக்கை பிடித்து வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிய பின்னர், சுமார் ஒரு மணி நேரம் வண்டியில் சுற்றிச் சென்று, அவரை வாயில் சுட்டு, தலையை நசுக்கி, அவரது வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உடலை வீசினர்.

 

இந்த கொடூர சம்பவம், கிராம மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. கொலைக்கு நீதி கோரி, செவ்வாய்க்கிழமை காலை, கோரக்பூர்-பிப்ராய்ச் சாலையை மக்கள் முற்றுகையிட்டு,  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. போலீசாரின் தகவலின்படி, ஒரு வாகனத்தை மக்கள் பிடித்து தீ வைத்தனர். மற்ற வாகனங்களில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர்.

கடத்தல்காரர்களில் ஒருவரை, கிராம மக்கள் துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கினர். இந்த வன்முறையின்போது, போலீசார்  தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றனர். இதில், SP (வடக்கு) ஜிதேந்திர ஸ்ரீவாஸ்தவா மற்றும் பிப்ராய்ச் காவல் நிலைய அதிகாரி புருஷோத்தம் உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்தனர். மேலும் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று பதற்றமான சூழலில் விழுகிறது.