மத்திய பிரதேச மாநிலம் மந்தசௌரில், நள்ளிரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபாச நடனத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர் மற்றும் அவரது நண்பர் குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அரசு மருத்துவர் ஒருவர் தனது நண்பரின் மனைவியுடன் ஆபாச  பாடல்களுக்கு மிக மோசமான முறையில் நடனமாடியுள்ளார். இந்த கூத்தை அந்தப் பெண்ணின் கணவரே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கவிட்டு, அநாகரிகமான முறையில் இவர்கள் நடந்து கொண்டது அண்டை வீட்டாருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

நீண்ட நேரமாகியும் இந்த அலப்பறை குறையாததால், பொறுமையிழந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக மருத்துவர், அவரது நண்பர் மற்றும் அவரது மனைவி ஆகிய மூவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டை ஒரு சர்க்கஸ் கூடாரமாக மாற்றி, அண்டை வீட்டாரைப் பாதிக்கும் வகையில் நடந்து கொண்ட இவர்களின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “நவீன சுதந்திரம் என்ற பெயரில் கண்ணியம் மற்றும் வரம்புகளை மீறுவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பெண்ணுரிமை என்பது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதோ அல்லது அநாகரிகமாக நடந்து கொள்வதோ அல்ல” என சமூக ஆர்வலர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.