19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடும் வகையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய உற்சாக நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸர்கள் மற்றும் பல பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்து வரலாற்று இன்னிங்ஸை பதிவு செய்தார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் ஓய்வறையில் (Dressing Room) வெற்றியை விமரிசையாகக் கொண்டாடினர். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பகிர்ந்துள்ள வீடியோவில், “நண்பர்களே, எனக்கு பஞ்சாபி பாடல்கள் புரியாது, இப்போது போஜ்புரி பாடல் ஒலிக்கப்போகிறது” எனக் கூறிவிட்டு வைபவ் நடனமாடத் தொடங்குகிறார்.

பவர் ஸ்டார் பவன் சிங்கின் புகழ்பெற்ற போஜ்புரி பாடலுக்கு வைபவ் ஆடிய தீவிரமான நடனம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

ஆட்டநாயகன் விருது வென்ற 14 வயது சூர்யவன்ஷி கூறுகையில், “இறுதிப் போட்டியில் தேவையற்ற அழுத்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். பெரிய போட்டிகளில் என்னால் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எங்கள் இயல்பான விளையாட்டை விளையாடியதே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்” எனத் தெரிவித்தார்.