ஜிம்பாப்வேயின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி. தொடக்கம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், வெறும் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் சதம் கடந்தார். அதோடு நிறுத்தாமல், ஆட்டமிழப்பதற்கு முன்பாக 80 பந்துகளில் 175 ரன்கள் (15 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள்) குவித்து மலைக்க வைத்தார். இவருடன் இணைந்து கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும் அரைசதம் கடக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய கேப்டன் ஆயுஷ் மாத்ரேவிடம், 6-வது முறையாக கோப்பையை வென்றது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் அடக்கத்துடன், “இந்த வெற்றிக்கு வைபவ் ஆடிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ் தான் மிக முக்கியமான காரணம். எல்லாம் அவரால்தான் சாத்தியமானது” என்று கூறி சக வீரரைப் பாராட்டி அனைவரின் இதயங்களையும் வென்றார்.

 

இதற்கிடையே, கேப்டன் ஆயுஷ் மாத்ரேவின் சிறுவயது வீடியோ ஒன்றை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பகிர்ந்துள்ளது. அதில் 6 வயது சிறுவனாக இருக்கும் ஆயுஷ், தான் ஒரு பேட்ஸ்மேனாக வர விரும்புவதாக மழலை மொழியில் கூறுகிறார். அன்று பேட்ஸ்மேனாக ஆசைப்பட்ட அந்த சிறுவன், இன்று இந்திய அணியை உலக சாம்பியனாக மாற்றியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

வெற்றிக்குப் பிறகு வைபவ் சூர்யவன்சி போஜ்புரி பாடலுக்கு நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “இந்த வெற்றிக்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம் சகோதரர்களே” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.