
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு சென்னையை சேர்ந்த 8 வாலிபர்கள் கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏலகிரி மலையை சுற்றி பார்த்த அவர்கள் அருகிலுள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு 8 வாலிபர்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜயகுமார் என்ற வாலிபர் திடீரென நீரில் மூழ்கி மாயமானார். இவர் சென்னையில் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளர் மகன். விஜயகுமார் காணாமல் போனதால் உடன் இருந்த நண்பர்கள் பதறிப்போய் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் விஜயகுமாரை தேடினர். கடந்த இரண்டு நாட்களாக நீர் தேக்கத்தில் காணாமல் போன விஜயகுமாரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர்களால் கண்டெடுக்க முடியவில்லை.
எனவே சென்னையில் இருந்து ஸ்கோப் டீம் வரவழைக்கப்பட்டு நீரின் உள்ளே தேடி பார்த்தனர். மற்றொரு பக்கம் தீயணைப்பு துறையினரும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது மாயமான விஜயகுமாரின் உடல் திடீரென நீரிலிருந்து வெளியே வந்து கரை ஒதுங்கியது. பின்பு கரை ஒதுங்கிய விஜயகுமாரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே விஜயகுமார் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.