சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 164 பேருடன் விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு சக பயணிகளிடம் தகராறு செய்தார். மேலும் அவர் ஆடைகளை கழற்றி ரகளை செய்ததால் சக பயணிகள் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தனர். அப்போது விமான பணிப்பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் யாருக்கும் இடையூறு செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். ஆனால் சுரேந்தர் சக பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்தார்.

இதுகுறித்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அந்த விமானம் தரை இயங்கியவுடன் விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் எரி போதையில் ரகளை செய்த சுரேந்தரை விமான நிறுவன மையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போதும் சுரேந்தர் என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது. நான் யார் என்பதை காட்டுகிறேன் என போதையில் பேசியுள்ளார். பின்னர் அவர் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.