நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து (57) சென்னையில் மாரடைப்பால் காலமானார். டப்பிங் முடிந்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய போது காலை 8:30 மணியளவில் மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார் மாரி முத்து.

அதேபோல பரியேறும் பெருமாள், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்த மாரிமுத்து ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். மேலும் தமிழில் யுத்தம் செய், கொம்பன், மருது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்களின் இல்லங்களில் பிரபலமானவர் மாரிமுத்து.

பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின்  தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பேசப்பட்டவர் மாரிமுத்து. தேனியைச் சேர்ந்த மாரிமுத்து ராஜ்கிரன் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார்.. மாரிமுத்துவின் இறுதி சடங்கு சொந்த ஊரான தேனியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார், எதிர்நீச்சல் நடிகர் – நடிகைகள் மற்றும் திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் தனது எக்ஸ் ட்விட்டரில், வருத்தம்!! நிம்மதியாக இருங்கள் #மாரிமுத்து சார்! உங்களுடன் இருந்த காலங்களை நினைவு கூர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில், தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன் என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன். தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன். இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன் குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.