பாலிவுட் பட வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில், 2026 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நேபாள அணி காட்டிய அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது. பலமான இங்கிலாந்து அணி நிர்ணயித்த 185 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய நேபாளம், கடைசி பந்து வரை இங்கிலாந்து வீரர்களுக்கு மரண பயத்தை காட்டியது. வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தப்பித்திருக்கலாம், ஆனால் வான்கடே மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களின் இதயங்களை நேபாளத்தின் லோகேஷ் பாம் (Lokesh Bam) வென்றுவிட்டார். தோல்வியிலும் ஒரு வெற்றியைக் கண்ட நேபாளத்தின் இந்த ஆட்டம், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ‘திக் திக்’ நிமிடங்களாக பதிவாகியுள்ளது.

​இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் மற்றும் ஜேக்கப் பெத்தேல் அதிரடியால் அந்த அணி 184 ரன்கள் குவித்தபோது, இது இங்கிலாந்துக்கு ஒரு எளிதான வெற்றி என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், லோகேஷ் பாம் களமிறங்கிய பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. வெறும் 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அவர் கொடுத்த ‘ஷாக்’, உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில், சாம் கரன் ஒருவழியாக இங்கிலாந்தை காப்பாற்றினார். சமூக வலைதளங்களில் “நேபாளம் ஆட்டத்தை இழந்திருக்கலாம், ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டது” என்று நெட்டிசன்கள் இந்த ‘புது வித்தக்காரரை’ கொண்டாடி வருகின்றனர்.