ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் இருக்கிறது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் சென்னை அணியில் இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளரான மதிஷா பதிரானா விளையாடி வருகிறார். அவர் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்தார். இவர் தற்போது எம்.எஸ் தோனி குறித்து மனம் உருகி  பேசிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் அவர் பேசியதாவது, தோனி எனக்கு அப்பா மாதிரி. அவர் கொடுக்கும் சிறிய அட்வைஸ் கூட மிகப் பெரிய அளவில் கிரிக்கெட்டில் எனக்கு உதவுகிறது. என்னுடைய அப்பாவுக்கு பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் என் அப்பாவின் வேலையை தோனி தான் செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறை காட்டுகிறார். அடிக்கடி நான் என்ன செய்ய வேண்டும் என்ற சில ஆலோசனைகளை வழங்கி வீட்டில் இருக்கும் என் அப்பா காட்டும் அதே அக்கறையை அவரும் காட்டுகிறார். அதுவே எனக்கு போதும். அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் நிறைய விஷயங்களை கூற மாட்டார்‌. ஆனால் அவர் சொல்லும் சிறிய விஷயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.