ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வட்டத்தில் லொகேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு எலக்ட்ரீசியனான லோகேஷ் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யசோதா ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் இரவு சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து யசோதா படுக்கையறைக்கு சென்று தூங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த லோகேஷ் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து பார்த்துள்ளார். அப்போது தனது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யசோதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் யசோதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.