தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூரியகோட்டை மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சங்கீதா மேள துளசேந்திரபுரத்தில் கணவருடன் வசித்து வந்துள்ளார். சசிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சங்கீதா பலமுறை கண்டித்தும் தொடர்ந்து அவர் மது அருந்தி உள்ளார். இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் சசிகுமார் வேலைக்கு  சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சங்கீதாவை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சங்கீதாவின் தாயார் சவுந்தரவல்லி அவரது மகள் சாவில் மர்மம் இருப்பதாக வரவாக்கோட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.