பிரபல நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் அனுமதி இன்றி வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு கட்டவுட் மற்றும் பேனர் வைக்க கூடாது என்றும் தமிழக அரசின் உத்தரவில் இருக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் பாதுகாப்பற்ற முறையில் நடிகர் அஜித் மற்றும் விஜயின் படங்களுக்கு கட்டவுட் வைத்திருப்பதாக வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் சென்றுள்ளது.

இதனால் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி பாபு சினிமாஸ் திரையரங்கில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அஜித் மற்றும் விஜயின் கட்டவுட், பேனர்களை அகற்றுமாறு திரையரங்க உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து ரசிகர்கள் மன்றங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திரையரங்க ஊழியர்களின் உதவியோடு கட்டவுட் மற்றும் பேனர் போன்றவைகள் அகற்றப்பட்டது. மேலும் அஜித்தின் 30 அடி உயர கட்டவுட்டை அகற்றும் போது திடீரென சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கட்டவுட் சரிந்து விழுந்ததில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.