திமுக கூட்டணி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் காண இருக்கும் நிலையில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் அவர்கள் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

ஆனால் இதுவரை எந்த தேர்தலிலும் இப்படி குறைவான தொகுதிகளில் போட்டியிட்டது கிடையாது எனவே திமுகவுக்கு எங்களுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டிய கடமை இருக்கிறது என சண்முகம் கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது, அனைத்து கட்சிகளும் அப்படித்தான் சிந்திக்கும். ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்புதான். நாங்களும் அப்படித்தான் சொல்கிறோம். திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி அதிமுக கூட்டணியாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற முயற்சிப்பது இயல்புதான்.

கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் கலந்து பேச இறுதி முடிவு எடுக்கப்படும். நாங்களும் கண்டிப்பாக கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று கூறினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூடுதல் தொகுதி வேண்டும் என கேட்டுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.