விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்களுக்கு யூவி கோட்டிங் செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு வழக்கம் போல் வேலை நடைபெற்றுள்ளது. வேலை முடிந்து தொழிலாளர்கள் செல்லும் போது அங்குள்ள ஹீட்டர் மெஷினை ஆப் செய்யாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் தொழிற்சாலை வெடித்து சிதறியது. இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராணி என்ற பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.