ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்களின் 16 வயது மருமகன் ஆரவ் மிஸ்ரா, கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 27) கான்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 11-ம் வகுப்பு மாணவரான ஆரவ், தான் “ஆத்மாக்களால் துரத்தப்படுவதாகவும்” என்றும், அவை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களைக் கொல்லும்படி அல்லது இறக்கும்படி வற்புறுத்துவதாகவும் கூறி ஒரு தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்திருந்தார்.

அவரது தந்தை அலோக் மிஸ்ரா மற்றும் தாய் ஆகியோர் சத் பூஜாவிற்காக பாகல்பூருக்குச் சென்றிருந்த நிலையில், தனது பாட்டியுடன் தங்கியிருந்த ஆரவ், வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆரவ்வின் பாட்டி அவரை அழைத்தபோது அவர் பதிலளிக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு ஆரவ் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோஹ்னா காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி, தற்கொலைக் குறிப்பு கிடைத்தது உறுதி என்றும், இந்தச் சம்பவம் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். ஆரவ் சமீப காலமாக மன அழுத்தத்தில் இருந்தார் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு முன், அவர் தனது சகோதரியிடம், சில அடையாளம் தெரியாதவர்களின் முகங்கள் தெரிவதாகவும், அவர்கள் தன் குடும்பத்தைக் காயப்படுத்தும்படி அல்லது தன்னை மாய்த்துக் கொள்ளும்படி சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில், குடும்பத்தினர் இதை சிறுவனின் கற்பனை என்று கருதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து, ஆரவ்வின் மனநலன் மற்றும் அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் வெளிப்புற காரணிகள் உள்ளனவா என்றும் விசாரித்து வருகின்றனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து ஆழமான விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.