ஜப்பான் நாட்டில் தனது அறைத் தோழியின் உதடுகளை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த 49 வயதான மசாய் சகுராய் என்ற பெண், கடந்த 2025 ஏப்ரல் முதல் தன்னுடன் வசித்து வந்த 42 வயது பெண்ணை வீட்டில் அடைத்து வைத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சகுராய் வீட்டில் இல்லாத நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண் தனது முகத்தில் வெள்ளை முகமூடி ஒன்றை அணிந்துகொண்டு, உயிருக்கு பயந்து வீட்டை விட்டு தப்பியுள்ளார்.
அருகில் இருந்த ஒரு கடைக்கு ஓடிச் சென்ற அவரால், உதடுகள் தைக்கப்பட்டிருந்ததால் வாய் திறந்து பேச முடியவில்லை. வலியால் அழுதுகொண்டே ஒரு பேப்பரில்”தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று எழுதி கடை ஊழியரிடம் காட்டியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சகுராய் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கோபமடைந்து, தனது வாயின் உட்புறம் வழியாகத் தையல் நூல் வெளியில் தெரியாத அளவுக்கு ஊசியால் குத்தி இந்த விபரீதத்தைச் செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சகுராயின் வீட்டிற்குப் பல ஆண்களும் பெண்களும் அடிக்கடி வந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ள நிலையில், அங்கு அடைக்கலம் கொடுக்கப்பட்ட மற்ற நபர்களுக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்ததா என்ற கோணத்திலும், இந்தத் கொடூரத் தாக்குதலின் பின்னணி குறித்தும் ஜப்பான் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
