உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் அரிசி, கோதுமை, சீனி போன்றவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்  கூறியதவதாவது, பொங்கல் பரிசு தொகுப்பு  டோக்கன்களை அரசு நியாய விலை கடை ஊழியர்கள் மட்டுமே வழங்குவர். இதில் அரசியல் தலையீடு இருக்காது. மேலும் கரும்பு கொள்முதலில் விவசாயிகளுக்கு கரும்புக்கு தலா 33 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மழைக்காலங்களில் திறந்த வெளியில் இருக்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் நனைவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 108 மூடப்பட்ட தானிய கிடங்குகள் கட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என பா.ஜ.க போராட்டம் நடத்துவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், பி.ஜே.பி. யினர் அரசியல் காரணங்களுக்காக தேங்காய் வழங்க சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழக முதல்வர் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க ஆலோசனை செய்து வருகிறார் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் ரேஷன் கடை பணி நியமங்களை அரசு தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளும் என்ற எண்ணம் இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் எவ்வாறு பணிநியமனம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதோ அதன்படியே எங்கள் ஆட்சியிலும் இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.