தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும். தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் இல்லாமல் சிபிஎஸ்இ, ஐ சி எஸ் இ, கேம்பிரிட்ஜ் பாடத்திட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய கல்வி துறையை நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடம் கற்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக இணைய கல்வி கழகம் என்ற தமிழ்நாடு விர்ச்சுவல் அகாடமி மூலமாக தமிழ் பாடங்களை ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.