புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் மனித கழிவுகளை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டை உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்தில் திடீர் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையத்தில் சோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.