மதுரையில் உள்ள சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு பிரபல அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் இணைந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில், தங்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஜெயராம் என்பவர் மாணவிகளை தொட்டுப் பேசுவது, சில்மிஷம் செய்வது, ஆபாச வீடியோக்களைக் காட்டுவது போன்ற பாலியல் தொல்லைகளில் ஈடுபடுவதாகவும், இதனால் பள்ளியில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியரின் இந்தச் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியை மற்றும் உதவி தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாறாக, வகுப்பறையில் இருந்த கேமராக்களை வேறு பகுதிக்கு மாற்றி வைத்து ஆசிரியரின் பாலியல் தொல்லைகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டனர் என்றும் மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியர் ஜெயராம், தலைமை ஆசிரியை பொற்செல்வி, உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.