தமிழகத்தில் இன்று குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில்  தேர்வு தொடங்க கால தாமதமாகியது. அதனால் தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப கூடுதல் நேரம் வழங்கப்படும் என தெரிவித்தது.

இந்நிலையில் குரூப் 2 தேர்வு தாமதமாக தொடங்கியது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவு எண்களால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காலை வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் வகையில் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்தவுடன் பிற்பகல் தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெற்றதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.