மதுரை மாவட்டம்  திருப்பாலையை  சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வைத்தியலிங்கம் (60) அவரது மனைவி ஜெயந்தி (55) , மகள் சரண்யா (36) மற்றும் வைத்தியலிங்கத்தின் அக்காள் செண்பகம் (72)  ஆகியோர் மதுரையில் இருக்கும்  உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ஒரு சொகுசு காரில் கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த காரை செல்வகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது பைபாஸ் சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம்  கார்  எதிர்பாராதவிதமாக, மோதியது.

இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி  சுக்குநூறாக நொறுங்கியது.  மேலும் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த செண்பகம், வைத்தியலிங்கம், அவருடைய மகள் சரண்யா மற்றும் கார் டிரைவர் செல்வக்குமார் (28) ஆகிய 4 பேரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு  நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் படுகாயம் அடைந்த செண்பகமும், வைத்தியலிங்கமும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் இருக்கும்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டுள்ளனர். மேலும் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.