இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நடுப்பகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்களை முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், இந்தத் திடீர் முடிவுகளுக்குப் பின்னால் என்ன நியாயம் உள்ளது என்று அவர் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரின் பாதியில் அணியை மாற்றுவது குறித்துப் பேசிய அப்ரிடி, “லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு இவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்வதற்கான நியாயம் அல்லது லாஜிக் என்னவென்று எனக்குப் புரியவில்லை. செய்யப்பட்ட மாற்றங்களும் எந்தவித அர்த்தமும் இல்லாமல் உள்ளன; இங்கிலாந்தில் நடைபெறுகின்ற ஒரு டெஸ்ட் போட்டிக்குச் சென்று விளையாட டி20 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது என்ன மாதிரியான சிந்தனை மற்றும் அணுகுமுறை?” என்று ஆவேசமாகக் கூறினார்.

 

மேலும், பயிற்சியாளர் மாற்றப்பட்ட விவகாரம் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “வெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு பயிற்சியாளரை நீக்கியது ஏன்? பல அனுபவமிக்க தேர்வாளர்களை உள்ளடக்கிய தேர்வுக் குழுவிலிருந்து வந்திருக்கக்கூடிய மிகவும் அதிர்ச்சியூட்டும் முடிவு இதுதான்” என்று அவர் கடுமையாகச் சாடினார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டிலும் 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவிருக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பாக் கிரிக்கெட் வாரியம் அணியிலும் நிர்வாகத்திலும் மிகப்பெரிய  மாற்றங்களைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் தோல்வியிலிருந்து தப்பிக்கவும், தொடரை 3-0 என இழப்பதைத் தவிர்க்கவும் புதிய அணியுடன் பாகிஸ்தான் களம் காணத் தயாராகி வரும் நிலையில், ஷாகித் அப்ரிடியின் இந்த விமர்சனம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.