2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மைதானத்தில் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் நெகிழ்ச்சியான சில தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்திரேலிய அணியின் தீவிர ரசிகரான ஜேக் ஜீக்கிங்ஸிடம், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது போட்டியின் போது ஜேக் ஜீக்கிங்ஸை அணுகிய பாகிஸ்தான் ரசிகர், அவருக்கு ஒரு ‘பரிசு’ வைத்திருப்பதாகக் கூறி சான்ட்பேப்பர் (Sandpaper) துண்டை வழங்கினார்.

இது கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணி சிக்கிய பந்து சேதப்படுத்தும் (Ball-tampering) சர்ச்சையை கிண்டல் செய்யும் விதமாக அமைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஜேக், அந்த ரசிகருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விளையாட்டு உணர்வுக்கு எதிராக நடந்துகொண்ட அந்த பாகிஸ்தான் ரசிகரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு நிகழ்வாக, தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மைதானத்திற்குள் மதுபான விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், ரசிகர் ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்திற்கே விற்பனையாளரை வரவழைத்து பீர் வாங்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.  கடுமையான போட்டிக்கு மத்தியில், தில்லியின் வெயிலைச் சமாளிக்க ரசிகர்கள் கண்டுபிடித்த இந்த ‘குசும்பு’ வழி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளையாட்டுப் போட்டி என்பது வெறும் ரன் மற்றும் விக்கெட்டுகளோடு நின்றுவிடாமல், ரசிகர்களின் இத்தகைய மாறுபட்ட உணர்வுகளையும் பிரதிபலிக்கும் களமாக மாறியுள்ளதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.