மகாராஷ்டிர மாநிலம் நாசிக் டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய வீடியோ இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட தௌசிப் அத்தார் என்பவரது வீட்டில் நடந்த ஈத் பெருநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், தௌசிப் அத்தார் புகார்தாரரை கட்டிப்பிடித்து அவருக்கு ஒரு ‘ஸ்கல் கேப்’ (Skull Cap) அணிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்துப் பேசியுள்ள புகார்தாரர், “நான் விருப்பமில்லாமலேயே தௌசிப் அத்தாரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டேன். அங்கு என்னைக் கட்டாயப்படுத்தி அந்தத் தொப்பியை அணிய வைத்ததுடன், எனது விருப்பத்திற்கு மாறாக நமாஸ் செய்யவும் வற்புறுத்தினார்கள்” என அதிரடிப் புகாரை முன்வைத்துள்ளார்.

தனது மதச் சுதந்திரத்தில் இது அப்பட்டமான தலையீடு என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், தௌசிப் அத்தாரின் தந்தை இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

“தனது மகன் மற்றும் அவருடன் இருப்பவர்கள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள்; அவர்கள் அனைவரும் அப்பாவிகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், இது ஒரு சாதாரண சமூகச் சந்திப்பா அல்லது கட்டாய மதமாற்ற முயற்சியா என இருவேறு கருத்துகள் கிளம்பி விவாதத்தைக் கிளப்பியுள்ளன.