கேரளா மற்றும் கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் தேசிய வங்கியின் வெவ்வேறு கிளைகளில் பணியாற்றி வந்த நிச்சயிக்கப்பட்ட காதலன் மற்றும் காதலி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அனுஸ்ரீ (25) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த அமல் (26) ஆகிய இருவரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. கர்நாடக மாநிலம் ஹுன்சூர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த அனுஸ்ரீ அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தார். காதலி இறந்த சில மணி நேரங்களிலேயே எர்ணாகுளத்தில் நண்பர்களுடன் தங்கிப் பணிபுரிந்து வந்த அமல், அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அனுஸ்ரீயின் மறைவுச் செய்தி அறிந்த அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் அமல் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் எந்தவொரு கடிதமும் மீட்கப்படாத நிலையில், இருவரின் மரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

 

காதலியின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை காசர்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடந்து முடிந்த நிலையில், அமலின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. திருமணக் கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய ஜோடி மரணத்தில் இணைந்த நிகழ்வு இரு குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.