மத்தியப்பிரதேசம் ஜபல்பூரை அடுத்த கித்தோலாவில் உள்ள ESAF நிதி நிறுவனத்தில் நடந்த அதிர்ச்சி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை  வெறும் 20 நிமிடங்களில் 14.5 கிலோ தங்கமும், ₹5 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைக்கு மூளையாக இருந்தவர், சமீபத்தில் ஒடிசா சிறையிலிருந்து விடுதலையான ரயீஸ் சிங் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறைக்குள் இருந்தபோதே கொள்ளை திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றத்தைச் செயல்படுத்த பீகாரைச் சேர்ந்த பிரபல குற்றவாளிகளுடன் ரயீஸ் சிங் கைகோர்த்துள்ளார். தனது கூட்டாளியான சோனு பர்மனின் உதவியுடன், இந்திரானா கிராமத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, கடன் வசூல் முகவராக நடித்து வங்கியின் நடமாட்டத்தை தினசரி கவனித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக 4–5 இளைஞர்கள் கிராமத்தில் ஹெல்மெட் அணிந்து பைக்குகளில் சுற்றித் திரிந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

“>

 

போலீசார் நடத்திய திடீர் சோதனையில், இந்திரானா கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர ஜாரியாவின் வீட்டில் இருந்து பதிவு செய்யப்படாத பைக், கைத்துப்பாக்கி மற்றும் பல சந்தேகப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. திருடப்பட்ட தங்கம் மீட்கப்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.