கன்னட சினிமாவின் தயாரிப்பாளரான எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் நடிகர் சூரஜ் குமார்(24). இவர் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மைசூரிலிருந்து ஊட்டிக்கு சென்று உள்ளார். இதையடுத்து பேகுர் அருகில் உள்ள மைசூர்- குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது சூரஜ் குமார் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதனால் படுகாயமடைந்த சூரஜ் மைசூரிலுள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சூரஜ் குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள் பலத்த சேதமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.