வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  தந்தை – மகன் இருவரும்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ஸ்ரீராம் என்ற பட்டாசு கடையை  நடத்தி வருகிறார் குமார். இந்நிலையில் இன்று இவரும், தனது மகனும் பட்டாசு கடையை திறந்து வியாபாரத்திற்காக உள்ளிருந்த பட்டாசுகளை வெளியே அடுக்கியதாக தெரிகிறது. அப்போது திடீரென்று பட்டாசு கடையில் உள்ளே இருந்து புகை வந்ததால், இவர்கள் இரண்டு பேரும் அதை அணைக்க உள்ளே சென்றதால் பட்டாசு வெடி சத்தம் அதிகமாகி இரண்டு பேரும் உள்ளே சிக்கியதாக தெரிகிறது. அதன்பின் அக்கம் பக்கத்தில் உள்ள  கடைக்காரர்கள் உடனடியாக அவர்களை மீட்க முயற்சித்தனர்.. ஆனால்  வெடிச்சத்தம் அதிகமாக இருந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் தண்ணீர் அடித்து அணைக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வாணியம்பாடி தாசில்தார், டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த பயங்கர தீ விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் குமார், அவரது மகன் தயாமூர்த்தி (12) 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயத்துடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை மற்றும் மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.