நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் காந்திபுரத்திலிருந்து நைனாமலை செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற மூன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நாமக்கல், சேலம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையை அனுமதிக்கும் குழுவினர் அது தொடர்பாக காளையை கொண்டு வரும் உரிமையாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் போட்டி நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது அவருடன் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலையரசு, போலீஸ் துணை சூப்பிரண்டு மீனா, சேந்தமங்கலம் அட்மாகுழு சேர்மன் அசோக் குமார், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன், சேந்தமங்கலம் தாசில்தார் செல்வகுமார் மற்றும் வருவாய் துறையினர் போலீசார் போன்றோர் உடன் இருந்தனர். அப்போது மைதானம் அமைந்துள்ள இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், மாடுகள் வெளியேறும் பகுதி, வாடிவாசல் அமைந்துள்ள பகுதி போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் மணிகண்டனிடம் இது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.