காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அக்கட்சியின் நூற்றக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்ட தொண்டர்களை கௌரவிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் கமல்ஹாசன் பேசினார்.

அவர் பேசியதாவது, பாஜக அரசு மதவாத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டிலுள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ராகுலின் ஒற்றுமை நடைபயணம் அமைந்துள்ளது. அதன் பிறகு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்த போது அதற்கு எதிராக மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.