கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்..

சேலம் ஓமலூரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்த போது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்க விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் சுவாதி மாறி சாட்சியளித்ததாக கூறி தாமாக முன்வந்து சுவாதி மீது நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சுவாதியின் கணவர் ஆஜரான நிலையில், சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலையில், சுவாதியின் உடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சி கூறியும் பிறழ் சாட்சியாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதை உறுதியாகக் கூறிய நீதிபதிகள் சுவாதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர். கோகுல்ராஜ் உடைய தாயார், அரசு தரப்பு, சிபிசிஐடி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உள்ளிட்ட மேல் முறையீடு தாரர்களின் உடைய தரப்பு வாதங்களுக்காக இந்த வழக்கினுடைய விசாரணையானது வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோகுல்ராஜ் இறந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்யப்போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அங்கு அவர் கடைசியாக இருந்த போது தான் சிசிடிவி காட்சிகள் பதிவானது. எனவே திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஏனென்றால் அந்த கோயிலின் உடைய அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழியும், வெளியே வரும் வழியும் புரிந்து கொள்வதற்காக ஜனவரி 22ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 11 மணிக்கு மேல் சென்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் இரு தரப்பிலிருந்து யார் வேண்டுமானாலும் ஆய்வின் போது பங்கேற்கலாம் எனவும் தெரிவித்தனர்.