சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் 416 திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.15.27 கோடி அரசின் பங்களிப்பு ரூ.19.97 கோடி பொதுமக்கள் பங்களிப்பு என ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் 372 திட்டப்பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதில் பூங்காக்கள் விளையாட்டு திடல்களை மேம்படுத்துதல் மற்றும் செடிகள் நடுதல் போன்ற 77 பணிகள், குளங்களை மேம்படுத்தும் 5 பணிகள், சென்னை மாநகர அழகுப்படுத்தும் 87 பணிகள், பொது கழிப்பிடங்களை மேம்படுத்தும் 27 பணிகள், சென்னை பள்ளிகளின் கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்புகளை மேம்படுத்தும் 118 பணிகள், மயான பூமிகளை மேம்படுத்தும் ஆறு பணிகள் மற்றும் மருத்துவமனைகள் சாலைகள் சாலை மைய தடுப்பு மற்றும் நடைபாதை போன்றவற்றை மேம்படுத்துதல் போன்ற 52 பணிகள் என மொத்தமாக 372 திட்டப்பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.24.85 கோடியில் இதுவரை ரூ.15.27 கோடி மேற்குறிப்பிட்டப்பட்டுள்ள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நமக்கு நாமே திட்டத்திற்காக சென்னை மாநகராட்சிக்கு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் மீதமுள்ள ரூ.9.58 கோடியை பயன்படுத்தி தங்கள் பகுதிகளில் திட்ட பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் திட்டப்பணி நிதி பங்களிப்பு குறித்த தகவல்களுடன் சென்னை மாநகராட்சியின் வட்டார துணை ஆணையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை அணுகி கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.