சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கடந்த முறை விசாரணை நடந்த போது எந்தெந்த வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 130 கிராம வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த சாலைகள் குறுகலாக  இருப்பதால் இங்கு பேருந்துகளை இயக்கினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சுரங்க பாதை வழியாக 173 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு 100% தாள்தள பேருந்துகளை இயக்கினால் மழைக்காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதேபோன்று மினி பேருந்துகள் 74 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு மெட்ரோ ரயில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் 186 வழிதடங்களிலும் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமற்றது.‌ இந்நிலையில் 342 தாழ்தள பேருந்துகளை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை தோராயமாக 65 வழிதடங்களில் இயக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதைக் கேட்ட நீதிபதிகள் பேருந்துகளை இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரர் தரப்பு ஆகியோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை வருகிற 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்