சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அரசியல் எல்லைகளைக் கடந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி சி.டி. நிர்மல் குமார் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான இரங்கல் செய்தியைப் பகிர்ந்துள்ளார். ​அவர் தனது பதிவில், “இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கியுள்ளார்.

அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். கடைசி நிமிடத்தில் தவெக நிர்வாகிகள் அந்த இளைஞரைக் காப்பாற்றப் போராடியதைச் சுட்டிக்காட்டிய நிர்மல் குமாரின் இந்தப் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.