இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கோண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 94 ரன்கள் குவித்தார்.

மேலும் கேப்டன் திலக் வர்மா 67 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். 378 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ​இந்த இறுதிப் போட்டி இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு வரலாற்றுப் போட்டியாக அமைந்தது. அவர் எதிர்கொண்ட வெறும் 11 பந்துகளிலேயே அரைசதம் கடந்து, லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

அவருக்கு அதிவேக சதம் அடிக்கும் பொன்னான வாய்ப்பு இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக 94 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வைபவ் இலங்கை வீரரைத் தள்ளிவிட்ட வீடியோ வைரலான நிலையில், இந்த மேட்ச்சில் அவர் 94 ரன்களுக்கு அவுட்டாகிச் சென்றபோது இலங்கை வீரர்கள் தங்களது பழைய பகையை மறந்து மைதானத்திலேயே அவரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டிய நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.