ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாகரை சேர்ந்தவர் பெர்னாண்டோ பெரேஸ். இவர் கிரிப்டோ கரன்சி குறித்து தாக்கத்தை ஏற்படுத்தும் காணொளிகளை இன்ஸ்டாவில்  பதிவு செய்து தானும் அதில் அதிக அளவில் சம்பாதித்துள்ளதாக தனது ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டி வந்தார். இவரை இன்ஸ்டாவில் 9,20,000 பின்தொடர்கின்றனர்.  சில நாட்களுக்கு முன்பு அர்ஜென்டினாவிற்கு சென்ற பெர்னாண்டோ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு இருந்தபோது திடீரென மாயமாகி உள்ளார்.

அவரை காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பியூனர்ஸ் ஹையர்ஸ் நகரின் கால்பந்து மைதானம் ஒன்றில் சிவப்பு நிற சூட்கஸ் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வழியில் கிடந்துள்ளது. இதனை பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் பெட்டியை சோதனை செய்தபோது அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் இருந்துள்ளது.

அந்த உடலில் குத்தி இருந்த டாட்டூக்களை வைத்து அது பெர்னாண்டோ பெரேஸ் தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அவர் கடைசியாக வெளியிட்டிருந்த குறிப்பில் கிரிப்டோ கரன்சி வீழ்ச்சியடைந்ததால் தான் அதிக பணத்தை இழந்து விட்டதாகவும் பர்ரா ப்ராவா என்ற வன்முறைக் கூட்டத்திடம் கடன் பெற்றுள்ளதாகவும் இதன் மூலம் தனக்கு ஏதேனும் நேர்ந்தால் யார் காரணம் என்பதை குறிப்பிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.