உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் வாகனம் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்  தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம்  ராம்பூர் கார்டன் பகுதியில் உள்ள ஒரு  உடற்பயிற்சிக் கூடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாகனம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், அது உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியே மோதலாக மாறியது.

 

இந்த மோதலின் போது, சில இளைஞர்கள் ஒரு திருநங்கை  மீது தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சல்மான் என்ற மன்னு சாரி  உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில்போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனைத்தொடர்ந்து வினோத் குமாரின் மகன் அர்வானி ஷர்மா மற்றும் சு சஞ்சீவ் குமார்  ஆகிய இருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.