நாடு முழுவதும் நமது சுதந்திரத்தின் பொன்விழா மற்றும் பெருமைமிகு தருணங்களைக் கொண்டாடும் சுதந்திர தின நன்நாளில், தேசத்தின் அடையாளமான மூவர்ணக் கொடிய அவமதித்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மிஷனரி ஹோலி கிராஸ் மருத்துவமனையில்  நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது  அந்த மருத்துவமனை வளாகத்தில் இந்தியத் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி எதிர்பாராதவிதமாகத் தரைக்கு வந்துள்ளது. தேசியக் கொடிக்கான உரிய மரியாதையைக் கொடுக்காமல், அது கீழே கிடந்ததை மருத்துவமனை நிர்வாகமோ அல்லது அங்கிருந்த பணியாளர்களோ உடனடியாகக் கவனிக்கவில்லை.

 

இந்நிலையில், அந்த வழியாகத் தூய்மைப் பணி செய்ய வந்த ஊழியர் ஒருவர், தரையில் கிடந்த தேசியக் கொடியைக் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல தனது துடைப்பத்தால்  அதைக் கூட்டித் தள்ளும் விதமாகச் செயற்பட்டுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் உடனடியாக அந்தத் தூய்மைப் பணியாளரிடம் சென்று, அது நமது தேசியக் கொடி என்றும், அதைத் தரையில் இருந்து உடனடியாக மிகுந்த மரியாதையுடன் கையில் எடுக்குமாறும் எச்சரித்துள்ளனர்.

ஆனால், அதைக் கொஞ்சமும் சற்றும் மதிக்காத அந்தப் பணியாளர், தன் கடமைக்கு எவ்விதப் பொறுப்புணர்வும் இல்லாமல், தேசியக் கொடியைத் துடைப்பத்தாலேயே அப்புறப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த அலட்சியச் செயலைக் கண்டு ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள், அந்த முழு நிகழ்வையும் தங்கள் செல்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ காட்சிகள் உடனடியாகச் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. தேசியக் கொடியின் மாண்பைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், அந்தப் பணியாளர் மீதும் நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். “நம் நாட்டின் சுதந்திர தின நாளிலேயே தேசியக் கொடிக்கு இத்தகைய அவமரியாதையா?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த அப்பகுதி காவல் நிலையத்திற்குப் பொதுமக்களும் தேசப்பற்றுள்ள அமைப்பினரும் நேரில் சென்று முறையான புகாரைத் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியக் குடிமகனாகிய ஒவ்வொருவரும் நமது தேசியக் கொடிக்கான  நெறிமுறைகளை அறிந்திருப்பது கட்டாயமாகும். அதன்படி  தேசியக் கொடி எப்போதுமே மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அது ஒருபோதும் தரை அல்லது பூமியில் பட அனுமதிக்கக் கூடாது. கொடியை எப்போதும் தூய்மையான மற்றும் நல்ல நிலையில் பராமரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.