ஆந்திரப் பிரதேச மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழக (APSRTC) பேருந்தில், இரண்டு பெண்கள் ஒரு ஆண் பயணியைத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

காக்கிநாடா மாவட்டத்தில் துனி முதல் நர்சப்பட்டினம் வரை சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்தில், சீட்டுப் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையே இந்த மோதலுக்குக் காரணம். ரிசர்வ் செய்வதற்காக இரண்டு பெண்கள் கைக்குட்டை போட்டு வைத்திருந்த இருக்கையில் அந்த ஆண் பயணி அமர்ந்ததால், முதலில் ஏற்பட்ட வாய்த் தகராறு, சில நிமிடங்களிலேயே வன்முறையாக மாறியது.

​கோபமடைந்த பெண்கள் இருவரும் அந்த ஆண் பயணியின் முடியைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். இதைக் கண்ட மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய், எப்படித் தலையிடுவது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆர்.டி.சி பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற சச்சரவுகள் தொடர்கின்றன என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதைத் தடுக்கக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.