சிவகாசி வெடிவிபத்தில் இறந்த முருகேஸ்வரி, பானு ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று பிற்பகல் (25.07.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. முருகேஸ்வரி,  க/பெ.ராமச்சந்திரன் (வயது 39) மற்றும் மண்குண்டாம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.பானு, க/பெ.சண்முகம் (வயது 39) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்திகளை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.