2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் 2023-24 வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம், உர மானியம், கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கடன், டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறது. வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது, ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க ரூபாய் 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.