ஆந்திராவின் அதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் திருமலா கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் 7-வது மைலில் அனுமன் சிலை அருகில் சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன்பின் அவர் மீண்டும் நடக்க தொடங்கியவுடன் அவருடன் இருந்த சிறுவன் கௌசிக்கை திடீரென்று ஒரு சிறுத்தை தாக்கியது. அதோடு அந்த சிறுத்தை சேஷாசலம் வனப் பகுதிக்குள் சிறுவனை இழுத்து செல்ல முயற்சி செய்தது.

அதன்படி சிறுத்தை சிறுவனை புதருக்குள் இழுத்து சென்றது. எனினும் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் கூச்சலிட தொடங்கி, சிறுத்தையை விரட்ட முற்பட்டனர். இதன் காரணமாக சிறுத்தை சிறுவனை விட்டு விட்டு தப்பிச்சென்றது. பின் ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு (TTD) அழைத்து சென்றனர். தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.