இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய அணியை  கிண்டல் செய்துள்ளார். முன்னதாக அவர் கணித்தபடியே இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, “இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறாது; தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும்” என்று அமீர் கணித்திருந்தார். இதற்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமீரை கிண்டல் செய்தனர்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதோடு, இந்தியாவின் ‘நெட் ரன் ரேட்’டையும் (NRR) வெகுவாகக் குறைத்துள்ளது. இதனால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு தற்போது சிக்கலாகியுள்ளது.

போட்டிக்கு பிந்தைய பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அமீரை, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் “ஜோதிடர், கிரிக்கெட்டர் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரை வரவேற்கிறோம்” என்று அறிமுகப்படுத்தினார்.

“பாகிஸ்தான் அணியால் செய்ய முடியாததை லாகூர் ஸ்டூடியோவில் இருந்தபடி அமீர் செய்துகொண்டிருக்கிறார். அவர் அபிஷேக் சர்மாவை ‘ஸ்லாக் பேட்டர்’  என்று சொன்னது முதல், அபிஷேக் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார். இந்தியா அரையிறுதி செல்லாது என்று சொன்னார், இப்போது அதுவும் நடப்பது போலத் தெரிகிறது” என்று தொகுப்பாளர் புகழாரம் சூட்டினார். இதைக் கேட்டு அமீர் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கிச் சிரித்தார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி இந்திய இந்திய இந்திய ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.