அதிகாரம் என்பது பல நேரங்களில் உயரமான மேடைகளிலும், எட்ட முடியாத நாற்காலிகளிலும்தான் அமர்ந்திருக்கிறது. ஆனால், எப்போது அந்த அதிகாரம் தன் கம்பீரத்தை ஓரங்கட்டிவிட்டு, உழைப்பையும் திறமையையும் தேடி கீழே இறங்கி வருகிறதோ, அப்போதுதான் அது ‘தலைமைத்துவம்’ என்ற உன்னத நிலையை அடைகிறது. 2026 ஜூலை மாதத்தின் இந்த மறக்க முடியாத நாளில், தமிழகத்தின் அதிகார மையத்தில் அப்படி ஒரு நெகிழ்ச்சியான, மனிதநேயத்தின் ஆகச்சிறந்த தருணம் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் கடினமாக உழைத்துத் தேர்வாகியிருந்த 751 மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா அது. அரங்கம் முழுவதும் வெற்றிக் கனிகளுடன் இளைஞர்கள் அமர்ந்திருக்க, அங்கே ஒரு அசாத்திய சாதனை தேவதை அமைதியாக அமர்ந்திருந்தார். அவர்தான் டாக்டர் பி. பிரசாந்தி பாலசுப்பிரமணியம்.

டாக்டர் பிரசாந்தி ஒரு சாதாரண மருத்துவர் அல்ல; மாற்றுத்திறனாளி பிரிவில், தமிழகத்தின் முதன்முதலான ரேடியேஷன் ஆன்காலஜி (புற்றுநோய் பிரிவு) மருத்துவாராகத் தேர்வாகி வரலாறு படைத்தவர். உடல் கொடுத்த தடைகளைத் தன் அசாத்திய மன உறுதியால் சுக்குநூறாக உடைத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரியில் (MMC) படித்து, இன்று புற்றுநோயாளிகளின் வாழ்வில் ஒளியேற்றத் தயாராகி நின்ற உன்னத உயிர் அவர்.

அவரது பெயர் மேடையில் வாசிக்கப்பட்டபோது, அரங்கமே ஒரு கணம் மௌனமானது. மாற்றுத்திறனாளியான அவர் மேடையேறுவதில் இருக்கும் சிரமத்தை உணர்ந்த கணமே, அந்த அற்புதம் நிகழ்ந்தது.

மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் விஜய், ஒரு நொடியும் யோசிக்காமல் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்திருந்தார். பாதுகாப்பு வளையங்களையும், நெறிமுறைகளையும் கடந்து, மேடையின் படிகளில் அவர் கடகடவென கீழே இறங்கி வந்தார். கிழே  நின்றுகொண்டிருந்த அந்த மாற்றுத்திறனாளி மருத்துவரின் அருகே நேரில் சென்று, புன்னகையோடு அந்தப் பணி நியமன ஆணையை வழங்கினார். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், தன் உழைப்பை மதித்துத் தேடி வந்ததைக் கண்ட டாக்டர் பிரசாந்தியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அந்த அரங்கம் முழுவதும் கைதட்டல்களாலும், உணர்ச்சிப் பெருக்காலும் அதிர்ந்தது.

அந்தப் பணி நியமன ஆணையை வழங்கும்போது, தான் ஒரு புற்றுநோய் மருத்துவர் என்று பிரசாந்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கணத்தில், முதலமைச்சர் விஜய் அவரது கைகளைப் பற்றி, “Very good, Keep it up” என்று நெஞ்சாரப் பாராட்டினார்.

“அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் என் உயிரைக் கொடுத்து அர்ப்பணிப்புடன் சேவை செய்வேன்” என்று அந்த இளம் மருத்துவர் உறுதியளித்த போது, நெகிழ்ந்துபோன முதலமைச்சர், “Very good, Very nice” என்று கூறி அவரது தோள்களைத் தட்டி ஊக்குவித்தார். ஒரு தேசத்தின் தலைவனும், அந்தத் தேசத்தின் ஏழைகளைக் காக்கப் போகும் ஒரு மருத்துவரும் கைகுலுக்கிக் கொண்ட அந்த நொடிகள், வெறும் அரசாங்க நிகழ்வு அல்ல; அது மனிதநேயத்தின் உச்சக்கட்டம்.

 இந்தச் சம்பவத்தில்  காண்பது ஒரு புதிய தமிழகத்தின் விடியலைத்தான். படிப்பதற்கே வசதிகள் இல்லாத சூழலில், அதுவும் உடல் சவால்களையும் தாண்டி, ஏழைகளின் உயிரைக் காக்கும் புற்றுநோய் மருத்துவப் பிரிவைத் தேர்ந்தெடுத்த பிரசாந்தியின் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளிய மக்களின் நோயைத் தீர்ப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று இந்த இளம் மருத்துவர்கள் உறுதியெடுக்கும்போது, இந்தச் சமூகத்தின் எதிர்காலம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்ற நம்பிக்கை பிறக்கிறது.

முதலமைச்சர் விஜய் மேடையை விட்டு இறங்கிச் சென்று காட்டிய இந்த எளிமையும் மதிப்பும், அதிகாரத்தில் இருப்பவர்கள் எளிய மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான ஒரு வரலாற்றுப் பாடம். சுவர்கள் இடிந்து விழும் அவலங்களுக்கும், வறுமையின் கண்ணீருக்கும் நடுவே, இப்படிப்பட்ட மனிதநேயத் துளிகள்தான் இந்த உலகத்தை இன்னும் அழகாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன!

“>