நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரேயா  சிங்கிடம் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டம் பரளி, புதுப்பட்டி, லத்துவாடி, அரூர் வளையப்பட்டி போன்ற பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசின் தொழில்துறையின் மூலமாக தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுப்பதற்காக ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

தொழிற்பேட்டைக்கு ஆய்வு செய்யும் பகுதி முழுவதும் சமவெளி இல்லாமல் மலை மற்றும் கரடு முரடான பகுதிகளாக அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் இருந்தே மழைக்காலங்களில் நீர் வடிந்து கால்வாய் மூலமாக பெரிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. அதேபோல் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் காரணமாகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்கிற செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், பழத்தோட்டங்கள், காய்கறிகள் அமைக்கப்பட்டு சாகுபடி செய்யபடுகிறது.

இந்நிலையில் சிப்காட் அமையும்போது தண்ணீர் செல்லும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டு நீர் வழி பாதை முற்றிலும் சேதம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதேபோல் காற்றில் மாசு ஏற்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி சிப்காட் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.