கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனிடையில் சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவை முன்னிட்டு கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

இதையடுத்து கடலூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் காவல்துறையினர் உதவியுடன் கனக சபை மீது வைக்கப்பட்ட பதாகையை அகற்றினர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தபோது “சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். பக்தர்கள் அனைவரும் கோவிலை இந்துசமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆகவே ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும். அந்த கோவிலில் அதிகாரம் மையம் போல் தீட்சிதர்கள் செயல்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்து உள்ளார்.