சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான்..

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரை,  மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன் பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்ற பேரவை விதிகளை பின்பற்றி, ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும் எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.

ஆகவே சட்டமன்ற பேரவை விதி 17ஐ தளர்த்தி இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவை குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும்,

அதேபோல இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம் பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன் படி தமிழ்நாடு அரசு தயாரித்த உரைக்கு மாறாக ஆளுநர் ரவி பேசிய வார்த்தைகள் நீக்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே முதல்வர் மு.க ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போது அவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ரவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.