சென்னை மாவட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவிலை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் நாகர்கோயிலை சேர்ந்த செல்வன், ஆன்சி தம்பதியினர், அவர்களது குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகிய நான்கு பேர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் பேருந்து கிளாம்பாக்கத்தில் நின்ற போது செல்வன் குழந்தைக்கு சாப்பாடு வாங்குவதற்காக பேருந்திலிருந்து இறங்கியுள்ளார். ஆனால் செல்வன் வருவதற்குள் ஓட்டுனர் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் செல்வன் ஒரு ஆட்டோவில் ஏறி பேருந்தை துரத்தி வந்து மீண்டும் பேருந்தில் ஏறினார்.

அப்போது செல்வன் கோபத்தில் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நிறுத்தப்பட்டது. அங்கு பேருந்து ஓட்டுனரும் அவருடன் இருந்த 5 பேரும் சேர்ந்து செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினரை இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.‌

இவர்களது உறவினரான ரிஷாந்த் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் ரிஷாந்த், செல்வன், ஆன்சி மூவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து செல்வன் ஆன்சி இருவரும் பேருந்து ஓட்டுனர் மீது புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பேருந்து ஓட்டுநர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்பு வேறு ஒரு பேருந்து ஓட்டுனரை வரவழைத்த அவரிடம் பேருந்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.