பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 13,500 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் 12- 6- 2023 அன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்தில் இருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500 இழப்பீடாக வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (5-10-2023) உத்தரவிட்டுள்ளார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நாளை தஞ்சாவூர் செல்ல உள்ள நிலையில் பயிர் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.